மும்பை : ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 89 பந்துகளில் சதம் விளாசி ஷர்துல் தாக்கூர் மிரட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. அந்த போட்டியில் 19 ஓவர்கள் வீசி அவர், 101 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இதையடுத்து 2வது போட்டியில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்படவில்லை. இதன்பின் என்சிஏவில் சில காலம் பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாக்கூர், ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட களமிறங்கினார். இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஷர்துல் தாக்கூர் தனது ஃபார்மை மீண்டும் எட்டியுள்ளார்.
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடி வருகிறது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை வீரர்களை மிரட்டி கொண்டிருந்தார்.
இதனால் ஆட்டம் தமிழ்நாடு பக்கம் திரும்பியது. அப்போது மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். சில ஓவர்கள் நிதானம் காட்டிய ஷர்துல் தாக்கூர், பின்னர் தனது பாணியில் அதிரடிக்கு மாறினார். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய ஷர்துல் தாகூர் 89 பந்துகளில் சிக்ஸ் அடித்து சதத்தை விளாசினார். இதனால் மும்பை அணி 275 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய ஷர்துல் தாக்கூர் 104 பந்துகளில் 4 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் ஷர்துல் தாக்கூர் ஃபார்மிற்கு வந்தது மகிழ்ச்சியை கொடுத்தாலும், தமிழ்நாடு அணிக்கு எதிரான தரமான சம்பவத்தை செய்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.