மும்பை: கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக செல்லும்போது பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சிலே நீண்ட நாட்கள் அமர்ந்து இருப்பது கடும் சவால்களை வீரர்களுக்கு ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
33 வயதான சர்துல் தாக்கூர், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றிருந்தார். இந்த தொடரில் சர்துல் தாக்கூர் 2 டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் பேட்டிங்கில் 3 இன்னிங்ஸில் மொத்தமாக அவர் 46 ரன்கள் எடுத்தார் பந்து வீச்சில் வெறும் இரண்டு விக்கெட் தான் அவர் கைப்பற்றி இருந்தார்.

ஆனால் அந்த தொடரில் அபிமன்யு ஈஸ்வரன், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷர்துல் தாக்கூர், எனக்கும் சில சமயங்களில் குல்தீப் மற்றும் அபிமன்யு போல் இந்திய அணையில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கின்றேன்.
அணிக்காக தேர்வு செய்யப்பட்டு நமது திறமையை வெளிப்படுத்த போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் போது அது மனதளவில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். சில சமயம் பெஞ்சில் அமர்ந்து போட்டியை பார்க்கும் போது போர் அடிக்கும். ஒரு கட்டத்தில் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றேன். நான் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டேன் என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால் இரண்டே இரண்டு விஷயங்கள் தான் மிகவும் முக்கியம். ஒன்று அனைவருக்கும் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.இரண்டாவது விஷயம் இந்திய அணியில் போட்டி என்பது மிகவும் அதிகம். இதனால் பல வீரர்கள் இருந்தாலும் வெறும் 11 வீரர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும். இதை இரண்டையும் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அணியில் வாய்ப்பு கிடைக்காத போது இதுதான் சரியான பிளேயிங் லெவன் என்று அணி நிர்வாகம் முடிவெடுக்கும் போது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில், இது நமக்கான ஆட்டம் கிடையாது. அதனால்தான் நாம் தேர்வு செய்யப்படவில்லை. ஆடுகளம் சூழலுக்கு ஏற்ப அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டு மனதுக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டும்.
நான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் விளையாடுவதற்கு ஏதோ அதிர்ஷ்டம் செய்திருக்கின்றேன் என்று தான் நினைக்கின்றேன்.
மேலும் பல ஸ்டார் வீரர்கள் இருக்கும் அதை அறையில் தான் நாமும் இருக்கின்றோம். அவர்களுடன் இணைந்து தான் உணவை நாம் அருந்துகின்றோம் என்று சர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.