துபாய்: இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி தலைவரை பன்னாட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்னின்று நடத்திய, பிசிசிஐ முன்னாள் தலைவரான சஷாங் மனோகரை ஒருமனதாக கமிட்டி முன்மொழிந்ததில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சமீபத்தில் 104 நாடுகளுக்கு டி 20 அந்தஸ்து வழங்கியது நினைவிருக்கலாம். அதே நேரத்தில் அடுத்த வருடத்திலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துவதில் ஐசிசி முனைப்பு காட்டி வருவது டெஸ்ட் போட்டிகள் இன்னும் கொஞ்சம் காலம் வாழ வழிவகுக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், நியூசிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகள் அதனுடைய இறுதி கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது என கனத்த கருத்தை பதிவு செய்ய, கிரிகெட்டை வெகு காலமாக ரசித்து வரும் மக்களிடம் ஒரு கசப்பான உணர்வை அது ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தற்போது நடைபெற்றுவரும் அயர்லாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக செல்வதும் டெஸ்ட் போட்டிகள் நிச்சயம் அவ்வளவு எளிதில் மறையாது என நம்பிக்கை அளிக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஐபிஎல் போன்ற ஃபிரான்சைசி கிரிக்கெட் பரவலாகி வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தி சர்வதேச அளவில் மீண்டும் கிரிக்கெட்டை பரவலாக்க வேண்டும் என்பதே மனோகரின் குறிக்கோளாக இருக்கும். அவரது முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துவோம்.