
என்ன பிரச்சனை?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் போன் கடை நடத்தி வந்தனர் தந்தை, மகனான ஜெயராஜ் - பெனிக்ஸ். லாக்டவுன் நேரம் என்பதால் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததாக எழுந்த பேச்சுவார்த்தையில், காவல்துறையினர் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

லாக்கப்பில் அடைப்பு
தந்தையைக் காணச் சென்ற மகன் பெனிக்ஸ்-யும் லாக்கப்பில் அடைத்ததாகவும், இருவரையும் கடுமையாக அடித்து காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர்.

வணிகர்கள் கொந்தளிப்பு
அப்போது மகன் மற்றும் தந்தை 10 மணி நேர இடைவெளியில் இறந்து விட்டனர். அவர்கள் மரணத்துக்கு காரணம், போலீஸ் லாக்கப்பில் நடந்த சித்ரவதை தான் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் இடையே இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெட்டிசன்கள்
மறுபுறம் இந்த விவகாரம் குறித்து தேசிய கவனம் ஈர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டரில் இதுபற்றி அதிகம் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில், இந்திய அணி துவக்க வீரர் ஷிகர் தவான் இது பற்றி ட்வீட் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

தவான் வெளியிட்ட பதிவு
தவான் வெளியிட்ட பதிவு - "தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் கேட்கவே பயங்கரமாக உள்ளது. நாம் குரல் கொடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்"

அதிரடியாக ட்வீட்
பொதுவாக இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அரசு, காவல்துறைக்கு எதிராக பேச மாட்டார்கள். எனினும், ஷிகர் தவான் எதையும் யோசிக்காமல் அதிரடியாக ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

தேசிய அளவில் கவனம்
அவரது ட்வீட்டை அடுத்து ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம் குறித்து தேசிய அளவில் கவனம் கிடைத்து விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். முதல் ஆளாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து குரல் கொடுத்த தவானுக்கு தங்கள் நன்றிகளை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











