டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இரு நாட்கள் முன்பு தன் மனைவி ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து வாங்கினார்.
அப்போது மனைவியின் கொடுமையால் அவருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதைக் கேட்ட பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது பிரபல வழக்கறிஞர் தீபிகா நாராயன் பரத்வாஜ் என்ன நடந்தது என ட்விட்டரில் விரிவாக கூறி இருக்கிறார்.

ஷிகர் தவான் 2012ஆம் ஆண்டு ஆயிஷா என்ற ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அவர் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தவர். அப்போதே அவர் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னரே தவானை மணந்து கொண்டார். அவருக்கு முதல் திருமணம் மூலம் இரண்டு மகள்கள் உண்டு.
இதையெல்லாம் அறிந்தே தவான் அவரை மணந்து கொண்டார். திருமணத்தின் போது தான் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து விடுவதாக ஆயிஷா உறுதி அளித்து இருக்கிறார். ஆனால், அதை அவர் செய்யவில்லை. இருவரும் ஒரு ஆண்டு கூட சேர்ந்து வாழவில்லை.
மேலும், தவான் - ஆயிஷாவிற்கு சோரோவர் என்ற மகன் பிறந்தார். அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்ததால் அந்த நாட்டு குடிமகன் ஆன நிலையில், இந்தியாவிற்கு வராமல் ஆஸ்திரேலியாவிலேயே ஆயிஷா தன் இரண்டு மகள்கள், தவானின் மகனுடன் இருந்து விட்டார்.
திருமணத்திற்கு முன் ஆயிஷா வேலை செய்து பணம் ஈட்டி இருக்கிறார். ஆனால், திருமணத்திற்கு பின் அவர் வேலை எதுவும் செய்யவில்லை. பின் ஆயிஷா தன் செலவிற்கு பணம் அனுப்புமாறு தவானை கேட்டுக் கொண்டார்.
தவான் தனது மகன், ஆயிஷாவிற்கு மட்டுமின்றி, அவரது இரண்டு மகள்களுக்கும் வேண்டிய அனைத்து விஷயங்களுக்கும் பணத்தை செலவழித்து இருக்கிறார். அவர்களின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ஆயிஷாவின் முதல் கணவர் தன் மகள்களுக்கு என தனியாக மாதா மாதம் பணம் அனுப்பி வருகிறார். அது போதாது என தவானிடமும் அதே செலவுகளுக்காக பணம் பெற்றுள்ளார் ஆயிஷா.
திருமணம் ஆகி 8 ஆண்டுகளில் சுமார் 13 கோடி அளவுக்கு பணம் கொடுத்து இருக்கிறார் ஷிகர் தவான், அதை தவிர்த்து அவர்களின் வெளிநாட்டு பயணம், குழந்தைகளின் படிப்பு செலவு, ஹோட்டலில் தங்கும் செலவு, கிரெடிட் கார்டு பில் என அதை தனியாக செலுத்தி இருக்கிறார். அதாவது இதெல்லாம் அந்த 13 கோடி இல்லாமல் கொடுத்தது.
ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவில் மூன்று சொத்துக்களை வாங்கி இருந்தார். அதில் 99 சதவீதம் தன் பெயரில் மாற்றி எழுத வேண்டும் என ஆயிஷா தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். அவற்றில் ஆயிஷாவிற்கு ஏற்கனவே பங்கு உள்ளது. ஆனாலும், மேலும் அதிக பங்கை கேட்டு இருக்கிறார்.
பின்பு ஒரு ஆஸ்திரேலியாவில் ஒரு சொத்தை விற்று அதில் பெரும் பணத்தை பெற்றார் ஆயிஷா. ஆனாலும், தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஆகும் செலவிற்கு தவான் பணம் அனுப்ப மறுக்கிறார் என பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் இந்தியாவில் உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகரிகள் சிலருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார் ஆயிஷா.
இதில் கொடுமை என்னவென்றால் கொரோனா காலத்தில், ஷிகர் தவான் தன் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார். ஆனால், அதை எதிர்த்து ஆயிஷா அவருடன் சண்டையிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பல கொடுமைகளை சந்தித்தார் தவான்.
இனியும் இந்த விஷயத்தை இழுக்க விரும்பாத தவான், தன் மகனை மட்டும் தன்னுடன் அனுப்பி விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு ஆயிஷா ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்தார். தற்போது நீதிமன்றம் மனைவியின் கொடுமையால் தவானுக்கு விவாகரத்து அளிப்பதாக முடிவு செய்து தீர்ப்பு அளித்து இருக்கிறது
இந்த தவகல்கள் வெளியான நிலையில் பலரும் ஷிகர் தவான் நிலையை எண்ணி தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர். சிலர் ஆயிஷா நடந்து கொண்ட விதத்தை குறித்து கடும் சொற்களால் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.