டாக்கா: வீரேந்திர சேவாக் இல்லாத குறையை ஷிகர் தவான் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 173 ரன்கள் எடுத்து, முரளி விஜயுடன் இணைந்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

டெஸ்ட் போட்டி மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டு, ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்நிலையில் கேப்டன் விராட் கோஹ்லி அளித்த பேட்டி: டெஸ்ட் போட்டிகளில் ஷிகர் இதேபோல ஆடினால், வீரு பாஜி (சேவாக்) போன்ற ஒரு வீரராக மாறுவார். ஏனெனில், வீரு ஆட்டத்தின் போக்கை தனி நபராக மாற்றும் திறமை கொண்டவர்.
வங்கதேச டெஸ்ட் போட்டியில் கிடைத்த தன்னம்பிக்கையை அடுத்துவரும் தொடர்களிலும் தவான் காண்பிப்பார் என்று நம்புகிறேன்.

இதேபோன்ற கிரிக்கெட் ஆட்டத்தைதான் நாங்கள் விரும்புகிறோம். 2 நாட்களதான் ஒழுங்காக கிரிக்கெட் விளையாட முடிந்தது என்றபோதிலும், ஆட்டத்தின் பெரும் பகுதியை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்திய பவுலர்களை பாராட்டி தீர வேண்டும். அனைத்து பவுலர்களும் ஒரு குறிக்கோளோடு பந்து வீசினர்.
வெப்பமான சூழ்நிலையிலும் இந்திய பவுலர்களின் தொடர்ச்சியான ஆர்வம் பாராட்டத்தக்கது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.