டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், சோஃபி ஷைன் என்ற வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த எளிய விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மட்டும் பங்கேற்றனர். அயர்லாந்தைச் சேர்ந்த பெணணான சோஃபி, தற்போது 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' (Da One Sports) மற்றும் ஷிகர் தவான் அறக்கட்டளைக்கு (Shikhar Dhawan Foundation) தலைமை தாங்குகிறார்.
தவான் மற்றும் சோஃபி இடையே ஓராண்டுக்கும் மேலாக காதல் இருந்து வந்தது. 2025 மே மாதம் தங்கள் காதலை அறிவித்த இந்த ஜோடி, ஜனவரி 12 அன்று இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் போது தவான் மற்றும் சோஃபி முதன்முதலில் ஒன்றாகக் காணப்பட்டனர். பின்னர், ஒரு நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்துகொண்டனர். அங்கு தவான் சாதாரணமாக தனது புதிய காதலைப் பற்றி குறிப்பிட்டபோது, சமூக ஊடகங்களில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது.
திருமணத்திற்கு முன்னதாக, பிப்ரவரி 20 அன்று இந்த ஜோடிக்கு ஹல்தி விழா நடைபெற்றது. சோஃபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வண்ணமயமான திருமணத்திற்கு முந்தைய சடங்குகளின் படங்களை பகிர்ந்து கொண்டார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால், இந்த விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "என் நண்பனின் திருமணம் என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம், அவரது நண்பர் தவானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல ரசிகர்கள் தவானுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழையைப் பொழிந்தனர்.
இது தவானின் இரண்டாவது திருமணமாகும். அவர் தனது முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜியுடன் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, அக்டோபர் 2023 இல் விவாகரத்து செய்தார். தவான் 2011 இல் ஆயிஷாவை மணந்தார். ஆயிஷாவுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு மகள்கள் உள்ளனர். காலப்போக்கில், அவர்களின் உறவில் பல பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது, இது இறுதியில் பிரிவில் முடிந்தது.
1990 இல் அயர்லாந்தில் பிறந்த சோஃபி ஷைன், அங்குள்ள கேஸ்ட்லராய் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்தார். சோஃபி தனது தொழில் வாழ்க்கையை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆலோசகராகத் தொடங்கினார். வணிகத் துறையில் தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். மார்ச் 2025 வரை அபுதாபியில் உள்ள நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷனில் துணைத் தலைவராகப் பணியாற்றியபோது அவரது தொழில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டது.
நிதித் துறையில் பணிபுரிந்த பிறகு, சோஃபி விளையாட்டை அடிப்படையிலான சமூக சேவைத் துறைக்கு மாறினார். தவான் தலைமையிலான 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தில் தலைமை இயக்க அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். கூடுதலாக, ஷிகர் தவான் அறக்கட்டளைக்கு தலைமை தாங்கி, அதன் சமூக நலத் திட்டங்களை வழிநடத்துவதிலும், சமூகங்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறார்.