மும்பை : சர்வதேச கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் அண்மையில் அறிவித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகப் போவதாகவும் ஷிகர் தவான் கூறினார்.
இந்த நிலையில் ஓய்வு முடிவை அறிவித்த இரண்டாவது நாளிலேயே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க போவதாக ஷிகர் தவான் அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷிகர் தவான், நம்மால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும்.

கிரிக்கெட் என்னுடைய வாழ்நாளில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. கிரிக்கெட் என்னை விட்டு எப்போதுமே போகாது. இதனால் நான் மீண்டும் என்னுடைய கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். இதன் மூலம் என்னுடைய ரசிகர்களுக்கு என்னால் மகிழ்ச்சியை கொடுக்க முடியும் என நினைக்கிறேன்.
அனைவரும் இணைந்து ஒரு நல்ல நினைவுகளை உண்டாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். அதாவது ஷிகர் தவான், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போகிறார். இதற்கான அறிவிப்பை தான் ஷிகர் தவான் தற்போது வெளியிட்டு இருக்கிறார். ஷிகர் தவான் கடைசியாக இந்திய அணிக்கு 2022 ஆம் ஆண்டு தான் விளையாடினார்.
அதன் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்பு இல்லை என்பதால் அவர் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றிருக்கிறார். இதன் மூலம் ஷிகர் தவான் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கு பெற தகுதியான நபராக மாறி இருக்கிறார்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கு பெற்ற வேர்ல்ட் சாம்பியன்ஷிப் தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் பிசிசிஐயே முன்னாள் வீரர்கள் பங்குபெறும் வகையில் ஒரு கிரிக்கெட் தொடரை உருவாக்க யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.