3வது போட்டி
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் பேட்டிங் மோசமாக சொதப்பியது. கேப்டன் ஷிகர் தவான் 28 ரன்களும், சுப்மன் கில் ஆகியோர் 13 ரன்களும் மட்டுமே அடித்து வெளியேற இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
மிடில் ஆர்டர்
இதன் பின்னர் வந்த அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட் 10, சூர்யகுமார் யாதவ் 6, தீபக் ஹூடா 12 ரன்கள் என ஏமாற்றினர். மறுமுனையில் தூண் போல நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 59 பந்துகளில் 49 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 64 பந்துகளில் 51 ரன்களையும் அடித்து காப்பாற்றினர். இதனால் 47.3 ஓவர்களில் 219 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சிறப்பான ஓப்பனிங்
சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓப்பனிங்கே அட்டகாசமாக இருந்தது. தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் - டெவோன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஆலன் 57 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக நின்ற கான்வே 38 ரன்களை விளாசினார். நியூசிலாந்து அணி 104 /1 ரன்களை அடித்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாக மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1 - 0 என தொடரை வென்றது.
ஷிகர் தவான் விளக்கம்
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொடர் இப்படி முடியும் என நான் நினைக்கவே இல்லை. இது முற்றிலும் இளம் படை. குட் லெந்த்-ல் பந்துவீசுவதற்கு இவர்கள் நிறைய கற்றுக்கொண்டனர். சில சமயங்களில் அது குறைவாக இருந்தது. அணியில் சரியான லெந்த்-ல் பந்துவீசுவது, உடலுக்கு அருகே வரும் பந்துகளை எப்படி அடிப்பது என பேட்டர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.
வங்கதேச சுற்றுப்பயணம்
தொடர்ந்து பேசிய அவர், அடுத்ததாக வங்கதேசத்திற்கு செல்கிறோம். அங்கேயாவது வானிலை சரியாக இருக்கும் என நம்புகிறேன். அனைத்து சீனியர் வீரர்களும் கம்பேக் தரவுள்ளனர். உலகக்கோப்பைக்கு தயாராக ஆசிய களங்களில் விளையாடுவது உதவும். எனவே வங்கதேச தொடரில் நிறைய அனுபவங்கள் ஏற்படும் என நம்புவதாக ஷிகர் தவான் கூறியுள்ளார்.