மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளார். இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.திருமண நிகழ்வுகள் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. ஷிகர் தவான் மற்றும் சோஃபி ஷைன் ஜோடி 2025ல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியின் போது முதன்முதலாக பொதுவெளியில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது.2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த இத்தம்பதியர், இந்தத் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனை தனது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதுகிறேன் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவர். மேலும், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
ஷிகர் தவான் இதற்கு முன் ஆயிஷா முகர்ஜியை மணந்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். விவகாரத்துக்கு பின்பு மகனை ஷிகர் தவான் பிரித்த நிலையில், சோக கடலில் மூழ்கி இருந்தார். தற்போது புதிய வாழ்க்கைக்கு தயராகி இருக்கிறார்.
ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா போன்றோர் திருமண வாழ்க்கை சரியாக அமையாமல், விவகாரத்து பெற்ற நிலையில், தற்போது இருவரும் மீண்டும் தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளனர். ஆனால், முகமது ஷமி மட்டும் இன்னும் இரண்டாவது திருமணம் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.