ரிஷப் பண்டை பாராட்ட, சஞ்சு சாம்சனை இகழ்வதா? ஷிகர் தவானின் பேச்சுக்கு ரசிகர்கள் கண்டனம்..என்ன நடந்தது
கிறிஸ்ட்சர்ச் : இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா அல்லது சஞ்சு சம்சனுக்கு தர வேண்டுமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.
சஞ்சு சாம்சன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் மேல் குவித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 66 .
ஆனால் சாம்சனுக்கு வாய்ப்பு தராமல் ரிஷப் பண்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட 38 பந்துகளில் சாம்சன் 36 ரன்கள் அடித்திருந்தார்.

ரிஷப் பண்ட் சதம்
ஆனால் ரிஷப் பண்ட் 6, 11, 15 ,10 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். எனினும் இது குறித்து பேசிய இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஷிகர் தவான் நாங்கள் ரிஷப் பந்த் வேண்டுமா இல்லை சஞ்சு சாம்சன் வேண்டுமா என்று தேர்வு செய்வதில் எந்த கடின முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. இங்கிலாந்து எதிரான ஒரு நாள் போட்டியில் பண்ட் அங்கு சதம்விளாசி அசத்தினார்.

மேட்ச் வின்னர்
நாங்கள் எதிர்காலத்தை வைத்து முடிவு எடுக்கிறோம். ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர் தான்.அதனால் அவருக்கு ஆதரவு கொடுப்போம். நாங்கள் பல விசயங்கள் வைத்து ஆராய்ந்து இந்த முடிவை எடுத்தோம். சஞ்சு சாம்சனும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக தான் விளையாடுகிறார். ஆனால் அவருக்கான வாய்ப்பு வரும் வரை அவர் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும். சஞ்சு சாம்சனுக்கு முன்பு ரிஷப் பந்த் போன்ற வீரர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

பாதுகாப்பு தருகிறோம்
ரிஷப் பண்ட்டிற்கு இருக்கும் திறமை அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று காட்டுகிறது. ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் சற்று தடுமாறும் போது நீங்கள் அவருக்கு பாதுகாப்பை கொடுக்க வேண்டும். அதனால் தான் தொடர்ந்து போட்டியில் வாய்ப்பு வழங்கி வருகிறோம். இந்திய அணியில் திறமையான வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஒரு இடத்திற்கு பல வீரர்கள் போட்டி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தவான் பாராட்டி இருக்கிறார்.

ரசிகர்கள் பதிலடி
ஷிகர் தவானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரசிகர்கள் ரிஷப் பண்டை போல் சஞ்சு சாம்சனும் ஒரு மேட்ச் வின்னர்தான் என்றும் சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் தவான் இப்படி பேசுவது சரியல்ல என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கியது போல் சஞ்சு சாம்சனுக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கியிருந்தால் அவரும் தோனியை போல் வளர்ந்து இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications