மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.
இந்த நிலையில் 37 வயதான ஷிகர் தவான் தற்போது இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லாத நிலையில் இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷிகர் தவான், இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று. கால நேரத்திற்கு தகுந்தாற்போல் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போது இளம் வீரர்கள் புதிய உத்திகளையும் புதிய சிந்தனையையும் கொண்டிருக்கிறார்கள். நான் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி இருந்தாலும் தற்போது இளம் வீரர்களை பார்த்து நானே ஊக்கம் பெற்று இருக்கிறேன்.
குறிப்பாக சிலர் விளையாடும் ஷாட்களை பார்த்து அவர்களிடமே சென்று இதை எப்படி நீங்கள் விளையாடினார்கள் என்று கேட்டிருக்கிறேன். ஒருமுறை நானும் சூரிய குமார் யாதவும் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் ஒரு ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார். நான் அவரிடம் சென்று இதை எப்படி விளையாடினாய் என்று கேட்டேன். அவரும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.உடனே இதை நான் வலைப்பயிற்சியில் செய்து பார்க்கப் போகிறேன் என்று கூறினேன்.
இதுபோன்ற மன நிலையில் இருந்தால் தான் நாமும் வளர முடியும். நாங்கள் இளம் வீரர்களாக இருக்கும்போது எங்களுடைய பயிற்சியாளர்கள் தூக்கி அடிக்காதே தரையோடு ஷாட் விளையாடு என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே நாங்கள் பெரிய ஷாட்டுகளை அவ்வளவாக விளையாட மாட்டோம். இதே போன்ற மனநிலையில்தான் நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் எல்லாம் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறார்கள்.
இப்போது உள்ள இளம் வீரர்களுக்கு பயமே கிடையாது. ஆனால் எங்களுக்கு அப்படி அல்ல. ஷாட்டுகளை தரையோடு தான் விளையாட வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். ஆனால் இளம் வீரர்கள் தூக்கி அடிக்கும் போது அவுட். ஆனாலும் அவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இருப்பது கிடையாது. இந்த மாற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.