பார்ட் டைம் பந்து போட்டது குத்தமாய்யா.. பந்தை எறிவதாக தவான் மீது ஐசிசி புகார்
துபாய்: பந்தை எறிவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மீது புகார் எழுந்துள்ளது. அவர் தனது பந்து வீச்சை 2 வாரங்களில் நிரூபித்தாக வேண்டும்.
டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்சில் இந்திய வீரர் ஷிகர் தவான் சுழற்பந்து வீசினார்.
டிவில்லியர்சும், ஆம்லாவும் நீண்ட நேரம் களத்தில் நின்றதால், அவர்கள் கவனத்தை கலைக்கும் நோக்கத்தில், அரிதாக பந்து வீசும் தவானை ஓவர் வீசச்செய்தார் கேப்டன் கோஹ்லி.

மூன்றே ஓவர்
மொத்தமே 3 ஓவர்தான் வீசினார் தவான். அதில் 1 மெய்டன் ஓவர். 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரது 3 ஓவர் பந்து வீச்சின்போது, பந்தை எறிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2 வாரங்களில்
இதுகுறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. இன்னும் 14 நாட்களுக்குள், தவான் ஆய்வு மையத்தில் வைத்து தனது பந்து வீச்சு தன்மை குறித்த ரிப்போர்ட்டை பெற வேண்டும். அதுவரை தவான் பந்து வீசுவதற்கு எந்த தடையும் கிடையாது. இவ்வாறு ஐசிசி கூறியுள்ளது.

பிரச்சினையில்லை
ஒருவேளை, பந்தை எறிவதாக உறுதியானாலும், தவானுக்கு பந்து வீச மட்டுமே தடை விதிக்கப்படுமே தவிர, போட்டியில் பங்கேற்பதற்கே தடை விதிக்கப்பட வாய்ப்பு கிடையாது.

பார்ட் டைம் பவுலர்
19 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தவான் இதுவரை வீசிய பந்துகளின் எண்ணிக்கை 54 மட்டுமே. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவான் பந்து வீசியது கிடையாது.


Click it and Unblock the Notifications