மும்பை: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரராக செயல்பட்டு வந்த ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 38 வயதாகும் ஷிகர் தவானின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவடைந்ததற்கு குடும்ப பிரச்சனைகளே காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி வீரராக ஷிகர் தவான் வலம் வந்த போது, 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷிகர் தவான். ஆயிஷா முகர்ஜியின் தந்தை பெங்காலி, தாய் பிரிட்டிஷை சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஆயிஷா முகர்ஜிக்கு குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம். இதனால் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்ட அவர், பிரபல குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வந்தார்.

தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச பாக்ஸராக அசத்தினார். இதன்பின் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்த ஆயிஷா முகர்ஜி, அவருடன் வாழ்ந்த போது இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 2000ஆம் ஆண்டு ஒரு குழந்தையும், 2005ஆம் ஆண்டு ஒரு குழந்தையும் பிறந்தன.
இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயிஷா முகர்ஜி விவாகரத்து செய்தார்.
இதன்பின் ஹர்பஜன் சிங் மூலமாக ஷிகர் தவானுடன் பழக்கம் ஏற்பட, இருவரும் சில காலங்கள் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 10 வயது வித்தியாசம், இரு குழந்தைகளுக்கு தாய் என்ற போதிலும் ஷிகர் தவான் திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் 10 வயது வித்தியாசம் இருந்தது.
இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஷிகர் தவானுடன் தொடர்ந்து பயணித்து வந்ததால், ஆயிஷா முகர்ஜியின் புகழும் உச்சம் சென்றது. இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் திடீரென ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து பெற்றனர்.

அதுமட்டுமல்லாமல் மகனை ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றார். ஷிகர் தவானின் மகனை பார்க்கவோ, பேசவோ கூட ஆயிஷா முகர்ஜி அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் வரை சென்று தான் ஷிகர் தவான் தனது மகனை சந்தித்தார். இப்போதும் ஷிகர் தவான் அவரது மகன் பிறந்தநாளன்று உருக்கமாக பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றாலுல் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஷிகர் தவான் அசத்தலாகவே செயல்பட்டு வந்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவும், சர்ச்சைகளும் ஷிகர் தவானை மனரீதியான உருக்குலைத்ததாகவே பார்க்கப்படுகிறது. அதுவே அவரின் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவு கொண்டு வந்துவிட்டதாக விவாதங்கள் எழுந்துள்ளன.