மும்பை: கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார்.
இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் முதல் இன்னிங்சில் சதம் அடித்தார். கடினமான 2வது இன்னிங்சிலும், 30க்கும் மேல் ரன் குவித்தார். இருப்பினும் பிற பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், இந்தியா தோற்றது.

இந்நிலையில், எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் தவான் விலகுவதாக பிசிசிஐ இன்று மாலை அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி இதுகுறித்து கூறுகையில், முதல் இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே, தவானுக்கு கையில் காயம் இருந்தது. அதை பொருட்படுத்தாமல்தான் தவான் விளையாடி சதம் அடித்தார். 2வது இன்னிங்சிலும் கணிசமாக ரன் எடுத்தார்.
தவான் தைரியமான வீரர். அணிக்கு எப்போது தேவையிருந்ததோ அப்போது தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற பாசிட்டிவ் மனப்பாங்குதான் அனைத்து வீரர்களுக்கும் வேண்டும். இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.