மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்த நிலையில், தனது மகன் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். தான் ஓய்வு பெற்றது குறித்து அழப் போவதில்லை என கூறிய தவான், தனது 11 வயது மகனுடன் நேரடியாக பேச முடியாத நிலையில் தன்னை பற்றி தனது மகன் நல்லவிதமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்.
இந்திய கிரிகெட் அணியின் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்தவர் ஷிகர் தவான். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இணையாக ரன் குவித்து வந்தார். 2022 ஆம் ஆண்டுக்குப் பின் ஃபார்ம் இழந்தது மற்றும் உடற்தகுதி போன்ற காரணங்களால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இளம் வீரார்கள் அவரது இடத்தை பிடித்ததை அடுத்து அவர் தாமாகவே ஒதுங்கிக் கொண்டார். இந்திய அணியில் இடம் பெறுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவில்ல. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்தார். 38 வயதான நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
அது குறித்து அவர் பேசுகையில், "இது எனக்கு கடினமான முடிவாக இருக்கவில்லை. நான் ஓய்வை அறிவிப்பது குறித்து உணர்ச்சிவசப்படவில்லை. அழுகவும் விரும்பவில்லை. நான் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் ஆடினேன். இப்போது நான் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது." என்றார்.
அவரது மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில் மகனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் ஷிகர் தவான். அவரது மகன் சோராவருக்கு 11 வயது தான் ஆகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது மகனை சந்திக்க முடியாமல், வீடியோ காலில் கூட பேச முடியாமல் தவித்து வருகிறார் தவான்.
இந்த நிலையில், தனது மகன் குறித்து பேசிய ஷிகர் தவான், "சோராவருக்கு 11 வயதாகிறது. எனது ஓய்வு குறித்து அவன் தெரிந்து கொள்வான் என நம்புகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தை குறித்தும் அவன் தெரிந்து கொள்வான். என்னை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், ஒரு நல்ல மனிதராகவே சோராவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். நான் நல்ல விஷயங்களை செய்து, நல்ல மனிதர்களை என்னை சுற்றிலும் வைத்துக் கொண்டேன் என்பதாகவே அவன் என்னை குறித்து நினைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்." என்றார்.
ஷிகர் தவானின் ஓய்வு முடிவின் பின்னணியில் அவரது மகனை பிரிந்து இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது மனைவியுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தொடர்ந்து தவான் விவாகரத்து பெற்றார். பின்னர் அவர் மனைவி, மகன் சோராவரை தன்னுடனே வைத்துக் கொண்டார். அவர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நிலையில் ஷிகர் தவானால் அவரது மகனை பார்க்க முடியாத நிலை உள்ளது.