மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுக்கு, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'1 x Bet' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியை ஷிகர் தவான் தனது சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வருவது இது முதல் முறையல்ல. சமீபத்தில்தான், முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் இதே வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், ஊர்வசி ராவ்டேலா எனப் பல பிரபலங்கள் இந்த விசாரணை வளையத்தில் உள்ளனர்.
இந்த சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அரசுக்கு பெரும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறி வருகிறது. சமீபத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா இதேபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் ரூ. 2,000 கோடிக்கும் மேல் நிதி திரட்டியதாக அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்த பிறகும், இது தொடர்பான பழைய வழக்குகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான 39 வயது ஷிகர் தவானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, இந்த வழக்கில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை விசாரணைக்கு அழைத்தாலும் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றே கூறப்படுகிறது.