ரசிகர்கள் ஆர்வம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச போட்டி இது என்பதால் ரசிகர்கள் மட்டுமன்றி வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த தொடரை எதிர்நோக்கி உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ஜெர்சியில் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் விளையாடுவதை ரசிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தவான் எச்சரிக்கை
இந்த நிலையில் தொடக்க அதிரடி வீரர் ஷிகர் தவான் நமது அணியின் ஜெர்சியை அணிந்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. ஷிகர் தவான் இந்த படத்துடன், புது ஜெர்சி புது உத்வேகம் ஆட்டத்துக்கு ரெடி என்ற வாக்கியத்தையும் பதிவிட்டுள்ளார்.
வெறித்தனமாக இருக்கும்
இது எங்க ஆட்டம் இனிமே வெறித்தனமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா வீரர்களை பார்த்து சொல்வது போல் உள்ளது. இவர் சொல்வதை போல் நமது அணியின் ஆட்டம் வெறித்தனமாக இருக்குமா? இல்லை கங்காரு (ஆஸ்திரேலியா) நம்மை ஆதிக்கம் செலுத்துமா? என்பதை அறிய இன்னும் 3 நாள்கள் மட்டும் காத்திருங்கள்
வார்த்தைப் போர் தொடருமா?
வழக்கமாக இந்தியா- ஆஸ்திரேலிய போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு மட்டுமல்ல, வீரர்களின் வார்த்தைப் போருக்கும் பஞ்சம் இருக்காது. சில தினங்களுக்கு முன்னர் பேட்டியளித்த ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் வார்த்தையை தவறுதலாக விட்டு சர்ச்சையில் சிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இதனை அந்த அணியின் மற்ற வீரர்களும், இந்திய வீரர்களும் கடைபிடிப்பார்களா என்பதே அனைவரின் ஆவல்.