கோல்ட் கோஸ்ட்: 2025 ஆசியக் கோப்பையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து முழுமையாக விலகிய நிலையில், அந்த வெற்றிடத்தை சிவம் துபே தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் நிரப்பி வருவதாக இந்தியாவின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, 'ஜியோஸ்டார்' நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் நாயர், சிவம் துபேவின் ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள முதிர்ச்சி மற்றும் அவரின் ஆல் ரவுண்ட் திறமைகளை சுட்டிக் காட்டினார்.

"இந்தியாவுக்குத் தேவையான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என்று நாம் எப்போதும் சொல்வோம். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும், அந்த ஆல்-ரவுண்டராக தன்னாலும் இருக்க முடியும் என்பதை சிவம் துபே நிரூபித்து வருகிறார். சிவம் துபே முக்கியமான ஓவர்களை வீசுவதாலும், முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதாலும், வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங்கில் பங்களிப்பதாலும் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை நாம் பெரிதாக உணரவில்லை." என்றார் அபிஷேக் நாயர்.
நான்காவது டி20 போட்டியில், சிவம் துபே மீண்டும் ஒருமுறை தனது ஆல்-ரவுண்ட் திறமையால் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 3-வது வீரராகக் களமிறங்கி 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்ததோடு, பந்துவீச்சில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் அபாரமான ஃபார்மில் இருந்த டிம் டேவிட் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, 168 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியாவின் வேகத்திற்குத் தடை போட்டார்.
சிவம் துபே சிறப்பாக பந்துவீசி 2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார். இத்துடன் 3 விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சும் சேரவே, ஆஸ்திரேலிய அணி 119 ரன்களுக்குள் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
"இந்திய அணி நிர்வாகம் சிவம் துபேவுக்கு எப்போதெல்லாம் சவால் விடுக்கிறதோ, அப்போதெல்லாம் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் 'தி ஆல்-ரவுண்டர்' என்று முத்திரை குத்தப்படாமல் இருக்கலாம், ஆனால் ஒரு இந்திய ஆல்-ரவுண்டர் செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்கிறார்" என்று குறிப்பிட்டார் அபிஷேக் நாயர்.
தனது வெற்றிக்கு, பயிற்சியாளர் குழுவின் நம்பிக்கையும், அவர்கள் வகுத்துக் கொடுத்த தெளிவான திட்டங்களுமே காரணம் என்று சிவம் துபே கூறியுள்ளார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் எனக்குத் தெளிவான திட்டங்களைக் கொடுத்து, அதைச் செயல்படுத்த எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர்," என்றார்.
"இந்த மைதானத்தில் 167 என்பது நிச்சயமாக ஒரு நல்ல ஸ்கோர். ஏனெனில் எங்களிடம் தரமான சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பெரிய பவுண்டரிகள் உள்ள திசையில் பந்துவீசுவதுதான் எங்கள் திட்டம், ஏனெனில் அங்கு சிக்ஸர் அடிப்பது கடினம்" என்று அவர் கூறினார்.