சென்னை: டெல்லி அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர்களான லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல் பந்துவீச்சில் சிவம் துபே வெளுத்து வாங்கியது சென்னை அணியின் வெற்றிக்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை விளாசியது. இதையடுத்து பேட்டிங் ஆடிய டெல்லி அணி 140 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.

சென்னை அணியின் இந்த வெற்றிக்கு ஸ்பின்னர்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். சென்னை அணியின் மொயின் அலி, ஜடேஜா மற்றும் தீக்சனா ஆகியோர் மொத்தமாக 10 ஓவர்கள் வீசி வெறும் 51 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். சென்னை அணி ஸ்பின்னர்களின் எகனாமி வெறும் 5.1 ஆக மட்டுமே உள்ளது. இதுவே சென்னை அணியின் வெற்றிக்கும், டெல்லி அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் டெல்லி அணி மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் களமிறங்கினர். மொத்தமாக மூவரும் இணைந்து 11 ஓவர்கள் வீசிய நிலையில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் 89 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். அவர்களின் எகனாமி 8.09ஆக உள்ளது. டெல்லி அணியின் ஸ்பின்னர்களை சென்னை அணியின் ராயுடு மற்றும் சிவம் துபே வெளுத்து வாங்கியதே இதற்கு காரணம்.
குறிப்பாக லலித் யாதவ் வீசிய 14வது ஓவரில் ராயுடு - சிவம் துபே இருவரும் சேர்ந்து மூன்று சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசி மொத்தமாக 23 ரன்களை அடித்தனர். அதேபோல் அக்சர் படேல் பந்துவீசிலும் கணிசமான ரன்களை சிவம் துபே விளாசினார். மற்ற வீரர்கள் அனைவரும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், சிவம் துபே மட்டும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
ஸ்பின்னர்களை விளாசுவதற்காகவே சிவம் துபேவை களமிறக்கி சென்னை அணி எதிரணியை பிரஷரில் தள்ளுகிறது. இதனால் சிவம் துபே வரும்போது வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வர வேண்டிய அவசியமும் எதிரணிக்கு ஏற்படுகிறது. இதனால் டெத் ஓவரில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான ஓவர்கள் குறையும் போது, சென்னை அணி வீரர்கள் அதிக ரன்களை சேர்க்கின்றனர். இந்த யுக்தியை புரிந்துகொள்ளாமல் தோனியின் திட்டத்திற்கு எதிரணிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.