மும்பை: நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபே ஹெல்மட்டில் பந்து தாக்கி மூளை அதிர்ச்சி அடைந்ததன் காரணமாக அவருக்கு மாற்றாக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை ஆட வைத்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இருந்தது.
அதற்கு ஐந்தாவது போட்டியில் சிவம் துபே தனது செயலின் மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் நான்காவது போட்டியின் முடிவில் ஹர்ஷித் ராணா அளவுக்கு சிவம் துபே பவுலிங் செய்ய முடியாது என குறிப்பிட்டு சிவம் துபேவின் பந்துவீச்சை குறைத்து மதிப்பிட்டு இருந்தார்.

மேலும், ஐந்தாவது போட்டியில் டாஸ் நிகழ்வின் போது தங்கள் அணியில் நான்கு இம்பாக்ட் வீரர்கள் இருக்கிறார்கள் என இந்திய அணியை சீண்டி இருந்தார். அதாவது ஐபிஎல் தொடரில் இருக்கும் இம்பாக்ட் வீரர் விதியைத் தான் இந்திய அணி நான்காவது போட்டியில் பயன்படுத்தி இருக்கிறது, சிவம் துபே பேட்டிங் செய்து முடித்த உடனம் அவரை ஒரு சாக்கு சொல்லி நீக்கி விட்டு, ஹர்ஷித் ராணாவை இந்திய அணி ஆட வைத்தது என்ற பொருளில் ஜோஸ் பட்லர் தங்கள் அணியில் நான்கு இம்பாக்ட் வீரர்கள் இருக்கிறார்கள் என சீண்டி இருந்தார்.
ஜோஸ் பட்லரின் இந்த விமர்சனங்களையும், சீண்டலையும் சவாலாக எடுத்துக் கொண்ட சிவம் துபே ஐந்தாவது டி20 போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை விழித்தினார். இரண்டாவது ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் சிவம் துபே இரண்டு ஓவர்கள் மட்டும் பந்து வீசி 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதிரடியாக ஆடி அரை சதம் அடித்திருந்த இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட் விக்கெட்டையும், ஆறாம் வரிசையில் களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் ஜேக்கப் பெத்தேல் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார் சிவம் துபே. இதன் மூலம் தன்னால் ஹர்ஷித் ராணா அளவுக்கு பந்து வீச முடியாது என்று பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரின் வாயை அடைத்து இருக்கிறார்.
நான்காவது போட்டியில் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரை விட ஒரு ஓவருக்கு சராசரியாக குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து, இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெடுகளையும் வீழ்த்திக் காட்டி இருக்கிறார் சிவம் துபே. இதன் மூலம் நான்காவது போட்டியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஐந்தாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்களை எடுத்தார். அவருக்கு அடுத்து சிவம் துபே சிறப்பாக ஆடி 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் சிவம் துபே 30 ரன் சேர்த்து இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.