மும்பை: 2023 ஐபிஎல் தொடரை சென்னை அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இளம் வீரர் சிவம் துபே. பெரிய ஹிட்டர்கள் இல்லாமல், சாதாரண வீரர்களை வைத்து தோனி பெரும் மேஜிக்கை நிகழ்த்தி காட்டினார்.
அந்த மேஜிக்கில் முக்கிய பங்கு வகித்தவர் சிவம் துபே. எப்போதெல்லாம் எதிரணி வீரர்கள் ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வருகிறார்களோ, அப்போதெல்லாம் களத்தில் சிவம் துபே இறக்கப்பட்டார். இமாலய சிக்சர்களை விளாசும் சிவம் துபேவுக்கு ஸ்பின்னர்களை வெளுப்பது எளிதாக அமைந்தது. இயற்கையாகவே ஸ்பின்னர்களை விளாசும் பாணியிலான ஆட்டத்தை கொண்டிருந்த சிவம் துபேவை தோனி சரியாக பயன்படுத்தி கொண்டார்.

இவரது தாக்குதலில் இருந்து ரஷித் கான், அஸ்வின், சாஹல் என்று நட்சத்திர பந்துவீச்சாளர்களும் தப்ப முடியவில்லை. மொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய சிவம் துபே 386 ரன்களை விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கேவின் செல்லப் பிள்ளையாகவே மாறிப் போனார். ஐபிஎல் தொடரில் இவர் ஆடிய ஆட்டம் சிவம் துபேவுக்கு இந்திய அணிக்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த உற்சாகத்தில் இருக்கும் சிவம் துபே தனது பேட்டிங் ஃபார்மை உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். தியோதர் டிராபி தொடரில் வெஸ்ட் சோன் அணிக்காக சிவம் துபே விளையாடி வருகிறார். இதில் நார்த் சோன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சிவம் துபே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

260 ரன்கள் இலக்கை வெஸ்ட் சோன் அணி துரத்திய போது, 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது களமிறங்கிய சிவம் துபே ஒருமுனையில் விக்கெட்டை தடுத்து நிறுத்தியதோடு, ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினார். இவருக்கு உறுதுணையாக கதன் படேல் களத்தில் இருக்க, நேரம் செல்ல செல்ல சிவம் துபே அதிரடிக்கு திரும்பி அட்டாக் செய்ய தொடங்கினார்.
சிறப்பாக ஆடிய அவர் அரைசதம் கடந்த பின் சிக்சர்களாய் விளாசினார். இதன் மூலம் வெஸ்ட் சோன் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவம் துபே 78 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அசத்தினார்.