சிவம் துபேவின் மனைவி மாஷா அல்லாஹ்! என பதிவு.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவம் துபே குடும்பம்
லக்னோ: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்ற நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபேவின் மனைவி மாஷா அல்லாஹ் என்று பதிவு போட்டு இருப்பது, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த டி20 உலககோப்பையில் சிவம் துபேவின் பேட்டிங் இந்திய அணிக்கு வரப்பிரசாதமாக மாறியது.
இறுதிப் போட்டியில் கூட கடைசி ஓவரில் சிவம் துபே 24 ரன்கள் குவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் தூபேவின் மனைவி அன்ஜும் கான், தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இவருடைய பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அன்ஜும் கான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நியூசிலாந்துக்கு எதிராக தூபே அதிரடியாக விளையாடும் படத்தைப் பகிர்ந்தார். அதில், "மாஷாஅல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ். நஸ்ருமிநல்லாஹி வ ஃபத்புன் கரீப். ஆமீன் சும்மமீன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அரபு வார்த்தைகளுக்கு "அல்லாஹ்வின் விருப்பப்படி, அனைத்துப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வின் அருளால், வெற்றிக்கு அருகில்" என்று அர்த்தம்.
1986 செப்டம்பர் 2 அன்று உத்தரப் பிரதேசத்தில் பிறந்த அன்ஜும் கான், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பாடங்களைப் பயின்றவர். கலை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் மாடல், நடிகை மற்றும் குரல் கலைஞராகப் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். பாலிவுட் படங்கள், இந்தி சீரியல்கள் மற்றும் இசை வீடியோக்களில் பல கதாபாத்திரங்களுக்கு அவர் பின்னணிக் குரல் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தள வெளிச்சத்திற்கு மத்தியிலும், அன்ஜும் கான் தனது தனிப்பட்ட வாழ்வைப் பேணி வருகிறார். ஒரு நண்பர் வழியாக ஷிவம் தூபேவை சந்தித்த அவர், பல ஆண்டுகள் காதலித்து வந்தனர். 2021 ஜூலை 16 அன்று இந்து மற்றும் முஸ்லிம் சடங்குகள் இரண்டையும் இணைத்து இத்தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் மதநல்லிணக்க திருமணம் சில வட்டாரங்களில் இருந்து விமர்சனங்களை சந்தித்த போதும், அவர்கள் உறுதியுடன் ஒருவருக்கொருவர் துணையாக நின்றனர்.
இந்த தம்பதிக்கு 2022 இல் மகன் அயான் என்ற குழந்தையும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தங்களது இரண்டாவது குழந்தையான பெண் குழந்தை மஹ்விஷ் பிறந்ததை தூபே அறிவித்தார். திருமணத்திற்கு பிறகும் இருவரும், அவரவர் மதத்தையே பின்பற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications