வேற ஆளை கொண்டு வாங்க.. அவர் எங்கேயுமே கேப்டனாக இருக்கக் கூடாது.. ஷோயப் அக்தர் சரமாரி விளாசல்!
கராச்சி : முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மதை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
2019 உலகக்கோப்பைக்கு பின் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முன்னாள் வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என எங்கே திரும்பினாலும் அடி வாங்கி வருகிறது பாகிஸ்தான் அணி.
குறிப்பாக கேப்டன் சர்பராஸ் அஹ்மது தான் எல்லோரிடமும் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார்.

உலகக்கோப்பை தோல்வி
உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அதன் பின் தோல்விகளாக குவித்து வந்தது. கடைசி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

கடும் விமர்சனம்
இந்த நிலையில், கேப்டன் சர்பராஸ் அஹ்மது குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார் ஷோயப் அக்தர். அவர் கூறுகையில், சர்பராஸ்-ஐ அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்குக்காக மட்டுமே அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

அக்தர் விளாசல்
மேலும், சர்பராஸ் அஹ்மதை கேப்டனாக தொடர அனுமதிக்கக் கூடாது. அவர் எந்த ஒருநாள், டி20, டெஸ்ட் என எந்த கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக இருக்கக் கூடாது என அவரை விளாசித் தள்ளி இருக்கிறார் ஷோயப் அக்தர்.

இம்ரான் கான் கண்காணிப்பு
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தான் சீரமைக்க உள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் முன் பன்ச் வசனம் பேசி இருக்கிறார். அவர் கூறியதை பார்த்தால், பாகிஸ்தான் அணி இனி இம்ரான் கான் கண்காணிப்பில் தான் இருக்கும் என தெரிகிறது.

கேப்டன் மாற்றப்படலாம்
இம்ரான் கான் கூறிய அறிவுரைப்படி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்யாத சர்பராஸ் அஹ்மது, நிச்சயம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்படுவார் என்கிறார்கள். இதை கணித்து தான் அக்தர் கேப்டனை மாற்ற வேண்டும் என கூறினாரோ என்னவோ!


Click it and Unblock the Notifications