லாகூர் : இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடருக்கு தன்னை தயார்ப்படுத்தி வருகிறது. ஆனால், அணியில் நிறைய குறைகள் உள்ளன.
அவற்றை பட்டியலிட்டு சல்லி சல்லியாக நொறுக்கி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர்.

இந்திய அணி : இந்திய அணி அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்து விட்டது. ஆனால், அந்த அணி கோப்பை வெல்லும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா? என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில் தான் அக்தர் தன் கருத்தை கூறி இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகள் : கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி தனக்கான 11 வீரர்கள் யார் என்பதை அடையாளம் காணவில்லை. இது மிகவும் விசித்திரமாக இருப்பதாகவும், யார் எந்த இடத்தில் ஆடுவார்கள் என்பதே புரியவில்லை என்றும் அக்தர் கூறி இருக்கிறார்.
யார் எங்கே ஆடுவார்கள்? : யார் நான்காம் இடத்தில் பேட்டிங் ஆடுவார்கள்? விராட் கோலி பேட்டிங் வரிசையில் 3, 4 அல்லது 5 எந்த இடத்தில் ஆடுவார்? இஷான் கிஷன் நல்ல வீரர். ஆனால், அவர் எங்கே பேட்டிங் ஆடுவார்? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
சாஹல் ஏன் இல்லை? : ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த சாஹல் ஏன் அணியில் இல்லை என்பதே எனக்கு புரியவில்லை. இந்திய தேர்வுக் குழு அவரை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
என்ன காரணம்? : கடந்த இரண்டு ஆண்டுகளில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியில் வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு காயம் மட்டுமே காரணம் இல்லை. ஒவ்வொரு தொடருக்கும் சாதகமான வீரர்கள் என இந்திய அணி முடிவு செய்தது தான் காரணம்.