
கிரிக்கெட் வர்ணனையாளர்
முன்னாள் பந்துவீச்சாளரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சோயிப் அக்தர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவருபவர். தன்னுடைய யூடியூப் மூலம் இவர் அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்தியா -பாகிஸ்தான் தொடர்மூலம் நிதி வசூலித்து, இரு நாடுகளும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பிற்கு பயன்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு இவர் கூறியிருந்தார். அதற்கு முன்னாள் ஆட்டக்காரர் கபில்தேவ் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செயல்முறையில் இல்லை என குற்றச்சாட்டு
தற்போது உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் குறித்தும், அதன்மூலம் விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளது குறித்தும் தொடர்ந்து பல்வேறு பேச்சுகளை இவர் தனது யூடியூப் மூலம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி போன இஸ்லாமாபாத்தின் சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சோயிப் அக்தர், அதை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதமான வானிலை
கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து தன்னுடைய வருத்தங்களை வெளியிட்டுவரும் அக்தர், இஸ்லாமாபாத்தின் காலியான சாலைகளில் பயணம் மேற்கொண்டு, யாருமற்ற சாலைகள், இதமான வானிலையில் சைக்கிள் பயணம் செய்வது சிறந்த உடற்பயிற்சி என்று குறிப்பிட்டு பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டிய அவர், இவ்வாறு நடந்து கொண்டது குறித்து அவர்கள் ஆத்திரம் தெரிவித்தனர்.

ஒன்றுதிரண்டு போராட கோரிக்கை
கொரோனாவிற்கு எதிராக உலகளவில் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்று முன்னதாக கேட்டுக்கொண்டார் அக்தர். ஆனால் தற்போது அவரது சைக்கிள் பயணம் தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அவரை மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பாக இது அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிரபலங்களின் தவறான செயல்கள்
இந்த நெருக்கடியான சூழலில் உலகளவில் பிரபலங்கள், தங்களது ரசிகர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், பின்பற்றக்கூடிய வழிமுறைகளையும் போதித்து வரும் நிலையில், நம்ம ஊர் பிரபலங்கள் இத்தகைய தவறான செயல்களை செய்து, அதை சமூகவலைதளங்களில் வேறு பரப்பி வருகின்றனர் என்றும் ஒரு ரசிகர் ஆதங்கம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











