கொரோனா வைரஸ் பரவல்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி இன்று சுமார் 170 நாடுகளில் இந்த வைரஸ் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளும் விதிவிலக்கல்ல. இது குறித்த விழிப்புணர்வு உலக மக்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா
கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது, அமெரிக்காவிலும் கால் பதித்து கடந்த சில நாட்களில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுள்ளனர். இத்தாலியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மிகச் சில நாட்களில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஓரளவு கொரோனா குறித்து அறிந்து கொண்டு, பாதுகாப்பாக உள்ளனர்.
கவலை இல்லை
எனினும், பாகிஸ்தான் நாட்டில் அந்த நிலை இல்லை என கவலைப்பட்டுள்ளார் ஷோயப் அக்தர். மக்கள் பலரும் வெளியில் சுற்றி வருவதாகவும், உணவகங்களில் சேர்ந்து அமர்ந்து உணவருந்தி வருவதாகவும் கூறி உள்ளார். அதே சமயம் இந்தியாவில் நடைபெற்ற ஊரடங்கை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
மக்கள் ஊரடங்கு வெற்றி
இந்தியாவில் கடந்த மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களும் அமைதியாக காட்சி அளித்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மிக சிறப்பாக அந்த ஊரடங்கு வெற்றி பெற்றது. இது பற்றி அக்தர் தன் யூ-ட்யூப் சேனலில் பேசி உள்ளார்.
வெளியே சென்றேன்
"இன்று நான் மிக முக்கியமான வேலையாக வெளியே சென்று இருந்தேன். நான் யாருடனும் கை குலுக்கவில்லை. யாரையும் அணைக்கவில்லை. அந்த முழு நேரத்திலும் என் காரின் ஜன்னல்கள் மூடப்பட்டு இருந்தது. நான் வீட்டுக்கு உடனே வந்துவிட்டேன். ஆனால், வெளியே நான் மோசமான விஷயத்தை பார்த்தேன்" எனக் கூறினார்.
சுற்றுலா
மேலும், "நான் 4 பேர் ஒரே பைக்கில் செல்வதை பார்த்தேன். அவர்கள் சுற்றுலா செல்கிறார்கள். மக்கள் வெளியே சேர்ந்து உணவு அருந்துகிறார்கள். ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். ஏன் உணவகங்கள் திறந்து உள்ளன. நாம் ஏன் இன்னும் அவற்றை மூடவில்லை?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
மிக ஆபத்தானது
"இந்தியாவில் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் நாம் பயணம் செல்வதை கூட நிறுத்தவில்லை. 90 சதவீத பாதிப்பு நேரடி மனித தொடர்பால் தான் ஏற்படுகிறது. ஆனாலும், நாம் வீட்டில் இருக்க தயாராக இல்லை. நாம் என்ன செய்கிறோம்? இது மிக ஆபத்தானது. மனிதர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவது போன்றது" என கூறி உள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
"இந்த கொரோனா வைரஸ் மிகப் பெரிய ஆபத்து என்பதை நாம் உணர மறுக்கிறோம். இந்த வைரஸ் வெயிலில் பரவாது, இள வயதுள்ளவர்களுக்கு வராது என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் ஷோயப் அக்தர்.