கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் டி20 கிரிக்கெட் வரலாற்றில் பிரம்மாண்ட மைல்கல் சாதனையை படைத்து இருக்கிறார். காலையில் தன் மூன்றாவது திருமண செய்தியை உலகுக்கு அறிவித்த கையோடு டி20 போட்டிகளில் சாதனை படைத்து இருக்கிறார் சோயப் மாலிக்.
அவரது மூன்றாவது திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அவர் விவாகரத்து செய்து விட்டு, சானியா மிர்சாவுக்கும், தனக்கும் பிறந்த 5 வயது மகனை விட்டுவிட்டு அவர் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்த தகவலை இன்று அறிவித்தார்.

அந்த தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விட்டு அவர் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரில் விளையாடினார். அதில் பார்ச்சூன் பரிஷால் அணிக்காக ஆடிய அவர் 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 13000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். கிறிஸ் கெயில் 13000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்த முதல் வீரர் ஆவார். தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் சோயப் மாலிக் இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் கீரான் பொல்லார்ட் 12454 ரன்களுடனும், நான்காவது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி 11994 ரன்களுடனும் உள்ளனர். ஆசிய அளவில் டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் சோயப் மாலிக் பெற்றுள்ளார்.
சோயப் மாலிக் இதுவரை 526 டி20 போட்டிகளில் 13010 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 36 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 128. அவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 82 அரைசதங்கள் அடித்து இருக்கிறார். சோயப் மாலிக் சாதனையை விராட் கோலி அடுத்த ஆண்டுக்குள் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2024 ஐபிஎல் தொடர்களில் கோலி பங்கேற்க உள்ள நிலையில் அவர் 13000 ரன்களை எட்ட வாய்ப்பு உள்ளது.