மாலிக் ஓய்வு
பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் கனடாவின் குளோபல் டி20 தொடரில் விளையாடி வருகிறார். உலகக்கோப்பை தொடரில் மாலிக் மிக மோசமாக ஆடினார். சுத்தமாக ரன் குவிக்கவில்லை என்ற புகாருக்கு உள்ளானர். ஆனால், இந்த டி20 தொடரில் தொடர்ந்து ரன் குவித்து, நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் வலம் வருகிறார்.
ரஸ்ஸல் நிலை
ஆண்ட்ரே ரஸ்ஸல் தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா கிரிக்கெட் தொடரில் காயம்(?!) காரணமாக விலகி இருக்கும் நிலையில், இந்த டி20 தொடரில் பங்கேற்று சிறப்பாக ஆடி வருகிறார்.
போட்டியில் மழை
வான்கூவர் நைட்ஸ் - பிராம்ப்டன் வுல்வ்ஸ் இடையே ஆன போட்டி மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால், விரைவாக ரன் குவித்து பெரிய ஸ்கோரை எட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது முதலில் பேட்டிங் செய்த வான்கூவர் நைட்ஸ் அணி.
சிக்ஸ் மழை
அந்த அணியின் கேப்டன் ஷோயப் மாலிக் மற்றும் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் 10வது ஓவரில் ஜோடி சேர்ந்தனர். அதன் பின் இருவரும் அதிரடி காட்டினர். ஷோயப் மாலிக் 3 சிக்ஸ், ரஸ்ஸல் 4 சிக்ஸ் அடித்து 16 ஓவரில் அணியின் ஸ்கோரை 170 ஆக உயர்த்தினர்.
|
கண்ணாடி உடைந்தது
மாலிக் அடித்த இரண்டு சிக்ஸர்கள் பார்வையாளர்கள் பகுதியில் வீரர்கள் மற்றும் அணியினர் அமர்ந்து இருந்த அறைகளின் கண்ணாடியை நொறுக்கியது. முதல் சிக்ஸர் கண்ணாடியை உடைத்த போது அது லேசாகத் தான் உடைந்தது. மற்றொரு சிக்ஸ் அடித்த போது கண்ணாடி பெரிய அளவில் உடைந்தது.
வெற்றி யாருக்கு?
இந்தப் போட்டியில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. மாலிக் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.