ஹைதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், தனது இரண்டாவது மனைவி சானியா மிர்சாவை கைவிட்டு மூன்றாவதாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அதுபற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் சோயப் மாலிக்.
சோயப் மாலிக் பேசிய அந்த பேச்சு முழுவதும் ஒரே காதல் மயக்கம் தான். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எல்லாம் யோசிக்கக் கூடாது. இதயம் சொல்வதை கேட்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். ஏதோ ஞானியின் பேச்சைப் போல இருந்தாலும் காதல் மயக்கத்தில் இப்படி பேசி இருக்கிறார் சோயப் மாலிக்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அவர் 2010இல் இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், மூன்றவதாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை அவர் திருமணம் செய்தார். சனா ஜாவேத், உமைர் ஜாஸ்வால் என்பவருடன் முதல் திருமணம் செய்து சில நாட்களிலேயே அவரை விட்டு பிரிந்தார். அவரும், சோயப் மாலிக்கும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்படி சிக்கலான ஒரு உறவில் இருந்து சனா ஜாவேத் மற்றும் சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டனர். சோயப் மாலிக்கின் போக்கு சரியில்லை என்பதை உணர்ந்த சானியா மிர்சா தாமாகவே அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில், தனது மூன்றாவது திருமணம் குறித்து சோயப் மாலிக் பேசி இருக்கிறார்.
"உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ அதை தான் நீங்கள் செய்ய வேண்டும். மக்கள் அதைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பதை நீங்கள் யோசிக்கவே கூடாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது புரிய உங்களுக்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அதைப் பற்றி புரிந்து கொள்ள உங்களுக்கு 10 வருடமோ, 20 வருடமோ கூட ஆகலாம். ஆனால் நீங்கள் நினைத்ததை செய்ய வேண்டும்" எனக் கூறி இருக்கிறார் சோயப் மாலிக்.
சோயப் மாலிக் இதயம் சொன்னதால் சனா ஜாவேத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அது குறித்து யார் என்ன சொன்னாலும் 10, 20 வருடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து. இந்த கருத்தும் விவாதத்தை கிளப்பி உள்ளது.