மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிஃப் அஃபிரிடியின் மகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
35 வயதான ஆசிஃப் அப்ரிடி, நடந்து முடிந்த பிஎஸ்எல் போட்டியில் முல்தான் சுல்தான் அணிக்காக 5 போட்டியில் விளையாடி 8 விக்கெட்களை எடுத்து இருக்கிறார்.

கட்டுக்கோப்பாக பந்துவீசிய ஆசிஃப் அஃபிரிடிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்தது.
ஆனால் ஆசிஃப்க்கு அந்த தொடரில் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனையடுத்து ஆசிஃப் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்திய போது தான் அவரது மகளுக்கு உடல் நலம் குன்றியது. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆசிஃபின் மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் முழுவதும் மருத்துவ உபகரணங்களால் அந்த பிஞ்சு உடல் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள ஆசிஃப் தனது மகள் உயிருக்கு போராடி வருவதாகவும், அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஆசிஃப்க்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், உமர் குல்ஆகியோர் ஆதரவு அளித்து தைரியமாக இருக்கும் படி பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அஃபிரிடி இடம்பெறவில்லை.