ஆசிப்புக்கு அடி - அக்தர் நீக்கம்br/நிரந்தர தடை வரும் அபாயம்!
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப்பை, பேட்டால் அடித்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், அந்த அணியிலிருந்து காலவரையின்றி நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டுவென்டி டுவென்டி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் அணி சென்றுள்ளது. இந்த அணியில் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இடம் பெற்றுள்ளார்.
அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தன்னை இம்ரான் கானுடன் ஒப்பிட்டு அருகில் பந்து வீசிக் கொண்டிருந்த மற்றொரு வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப்பிடம் கூறியுள்ளார் அக்தர். இதைக் கேட்டதும் ஆசிப் கமெண்ட் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்தர், வாய்ச் சண்டையில் இறங்கியுள்ளார். சண்டை முற்றவே, தனது கையில் இருந்த பேட்டால், ஆசிப்பை தாக்கியுள்ளார். இதில் ஆசிப் படுகாயமடைந்தார்.
அக்தரின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வாரியம் உடனடியாக அவரை நாடு திரும்ப உத்தரவிட்டது. அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அக்தருக்குப் பதில் முகம்மது சமி அனுப்பப்பட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தான் அணியிலிருந்து காலவரையின்றி அக்தர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்தரின் செயல் நாட்டையே அவமானத்திற்குள்ளாக்கி விட்டது. அவரிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் கூறியுள்ளார்.
அக்தர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கிரிக்கெட் ஆட வந்ததிலிருந்தே அவர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார். 1996ம் ஆண்டு தனது ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
2002ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியின்போது அக்தரின் போக்கால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் அவர் மீது செங்கல்லைத் தூக்கி எறிந்தனர். அதே ஆண்டில் ஜிம்பாப்வே சென்றிருந்தபோது, கூட்டத்தினர் மீது பாட்டிலை தூக்கி வீசினார். இதையடுத்து ஒரு, ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டார். பின்னர் முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பிடிபட்டார்.
2003ம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியதாக விளையாடத் தடை விதிக்கப்பட்டார். பின்னர் தென் ஆப்பிரிக்க தொடரின்போது பால் ஆடம்ஸ் பந்து வீச்சை விமர்சித்ததாக சர்ச்சையில் சிக்கி ஒரு டெஸ்ட், 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டார்.
2005ம் ஆண்டு இன்சமாம் உல் ஹக்குடனும், பயிற்சியாளராக இருந்த பாப் உல்மருடனும் சண்டை.
2006ல் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டார்.
2007ல் பயிற்சியின்போது பயிற்சியாளர் பாப் உல்மரை தாக்கியதாக வெளியான டிவி காட்சியால், அபராதம் விதிக்கப்பட்டார். இப்போது சக வீரர் ஆசிப்பை பேட்டால் அடித்து சிக்கலில் மாட்டியுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் அக்தருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கலாமா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது செயலுக்கு அக்தர் வருத்தமும், மன்னிப்பும் கோரியுள்ளார். ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நானும் சாதாரண மனிதன்தான். ஒரு கோபத்தில் அவ்வாறு செய்து விட்டேன். இதை பெரிதுபடுத்தி விட்டார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அணியில் சேர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், போராடினேன் என்பது எனக்குத் தெரியும்.
ஆசிப்பை அடித்தது தவறுதான். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications