லண்டன்: இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தொடங்க உள்ள நிலையில், அங்கு விளையாடப் பயன்படுத்தப்படும் 'டியூக்ஸ்' பந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வான்வெளி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதே இந்த மாபெரும் நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும்.
இங்கிலாந்தில் புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில், அங்குப் பந்துகளின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டியூக்ஸ் பந்துகளுக்கான தோல் இங்கிலாந்தில் பதப்படுத்தப்பட்டாலும், அதைத் தைக்கும் பணிகள் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில்தான் நடைபெறுகின்றன.

முழுமையாகத் தயாரான டியூக்ஸ் பந்துகள் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக விமானம் மூலம் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்படும். ஆனால், மேற்கு ஆசியப் போர் பதற்றம் காரணமாக வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பந்து விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் அந்தப் பாதையைத் தவிர்ப்பதால், பந்துகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துகளும் வந்து சேரவில்லை.
இது குறித்து டியூக்ஸ் பந்துகளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் ஜஜோடியா கூறுகையில், "தற்போதைய போர்ச் சூழலால் நாங்கள் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பந்துகள் தயாராக இருந்தாலும், சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், சீசனின் தொடக்கத்தில் அணிகளுக்குத் தேவையான பந்துகளில் 50 சதவீதத்தை மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம்" என்று கவலையுடன் தெரிவித்தார்.

கவுன்டி கிரிக்கெட் என்பது 4 நாட்கள் நடைபெறும் போட்டி என்பதால், அதில் அடிக்கடி பந்துகளை மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், வெறும் 50 சதவீத பந்துகளுடன் மட்டுமே சீசனைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் அணிகள் தள்ளப்பட்டுள்ளன. இலங்கை வழியாக மாற்றுப் பாதைகளில் பந்துகளைக் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்க, ஆஸ்திரேலியாவின் கூகபுர்ரா பந்துகளைப் பயன்படுத்த கவுன்டி அணிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது பெரும் சிக்கலில் தவித்து வருகிறது.
