ஜெய்ப்பூர்: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கி, மும்பை அணிக்காக 82 ரன்கள் குவித்து அசத்தினார். விஜய் ஹசாரே டிராபி 2025-26 தொடரில் ஜெய்ப்பூரில் ஹிமாச்சலுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டி, ஐயரின் உடல் தகுதியை நிரூபிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒரு களமாக அமைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகத் தொடங்கியது.
மும்பை அணியின் கேப்டனாக, நான்காம் வரிசையில் களமிறங்கிய ஐயர், 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். முஷீர் கானுடன் (51 பந்துகளில் 73 ரன்கள்) மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்களும், சூர்யகுமார் யாதவுடன் (18 பந்துகளில் 24 ரன்கள்) நான்காவது விக்கெட்டுக்கு 65 ரன்களும் என முக்கியக் பார்ட்னர்ஷிப்களை அமைத்தார்.

ஜனவரி 3 அன்று இந்தியா, நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் ஐயர் இடம்பெற்றிருந்தார். அவரது பங்கேற்பு உடல் தகுதியைப் பொறுத்தே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தனது பேட்டிங்கால் அந்த சந்தேகங்களைத் தீர்த்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், முழு 33 ஓவர்களுக்கும் பீல்டிங் செய்வது கூடுதல் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இப்போட்டியில் மும்பை அணியின் மற்ற நட்சத்திரங்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (15), சூர்யகுமார் யாதவ் (24), சிவம் துபே (20) மற்றும் சர்பராஸ் கான் (21) ஆகியோர் ஏமாற்றமே அளித்தனர். ஜெய்ஸ்வாலை வைபவ் அரோரா, சூர்யகுமாரை குஷால் பால், சர்பராஸ் மற்றும் துபே ஆகியோரை அபிஷேக் எம். குமார் ஆகியோர் வெளியேற்றினர்.
ஜனவரி 11ல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கு ஷிரேயாஸ் ஐயருடன் ஜெய்ஸ்வாலும் ஜெய்ப்பூரில் இருந்து வதோதராவுக்குப் பயணிக்கவுள்ளார். துபே மற்றும் சூர்யகுமார், ஜனவரி 21 முதல் அதே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் களமிறங்குவார்கள்.ஐயரின் அபார பேட்டிங்கால், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 33 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்து, ஹிமாச்சல் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது.