சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயம் மோசமானதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், அது உயிருக்கே ஆபத்தாக மாறலாம் என்பதாலும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது, பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அப்போது, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, கடினமான முறையில் ஓடி வந்து, டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். வெற்றிகரமாக கேட்ச் பிடித்தபோதிலும், தரையில் வேகமாக மோதியதில் அவரது விலா எலும்புப் பகுதியில் பலத்த அடிபட்டது.

வலியால் துடித்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு, உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் மைதானத்திலேயே முதலுதவி அளித்தார். இருப்பினும், வலியின் தீவிரம் குறையாததால், அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆட்டமிழந்து ஓய்வறைக்குத் திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரது இரத்த அழுத்தம் அபாயகரமான அளவிற்கு குறைந்ததையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து இந்திய அணி வட்டாரம் வெளியிட்ட தகவலில், "ஸ்ரேயாஸ் கடந்த சில நாட்களாக ஐசியூ-வில் இருக்கிறார். மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் வந்த பிறகு, அவருக்கு உள் இரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்தக் கசிவால் ஏற்படும் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்பதால், குணமடைவதைப் பொறுத்து இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடனடி நடவடிக்கை குறித்து அந்த வட்டாரம் மேலும் கூறுகையில், "அணியின் மருத்துவர் மற்றும் பிசியோ எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பாமல் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இப்போது நிலைமை சீராக உள்ளது, ஆனால் இது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கக்கூடும். அவர் ஒரு மனவலிமை மிக்க வீரர், விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம்" என்றார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பீல்டிங்கின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ் விலா எலும்பு பகுதியில் அடிபட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது மண்ணீரலில் சிதைவு காயம் (laceration injury to the spleen) ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது" என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் சுமார் மூன்று வாரங்களில் குணமடைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால், அவர் முழுமையாகக் குணமடைய அதிக காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
"உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால், அவர் குணமடைய நிச்சயம் அதிக காலம் தேவைப்படும். இந்த நிலையில், அவர் எப்போது மீண்டும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புவார் என்பதற்கான சரியான காலக்கெடுவை நிர்ணயிப்பது கடினம்" என்றும் இந்திய அணி வட்டாரம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், குறைந்தது ஒரு வாரமாவது சிட்னி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும், அதன் பின்னரே அவர் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திடீர் காயம் அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.