ஸ்ரேயாஸின் அட்டகாச சதம்.. இஷான் கிஷான் காட்டிய வானவேடிக்கை.. 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள மைதனாத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடினமான இலக்கு
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஓப்பனர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஷாக் கொடுத்தனர். ஓப்பனிங் வீரர்கள் குயிண்டன் டிக்காக் 5 ரன்களுக்கும், ஜென்னிமான் மாலன் 25 ரன்களுக்கும் வெளியேறினர். எனினும் இந்தியாவிற்கு பவர்ப்ளேவில் கிடைத்த சாதகம் மிடில் ஓவர்களில் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் - எய்டன் மர்க்ரம் ஜோடி தான்.

மிடில் ஓவர் விக்கெட்கள்
சிறப்பாக விளையாடிய ஹெண்ட்ரிக்ஸ் 74 (76) ரன்கள் மற்றும் எய்டன் மர்க்ரம் 79 (89) ரன்களை குவித்தனர். இதனால் 40 /2 என இருந்த தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 169/3 என மாறியது. இதன்பின் வந்த ஹெய்ன்ரிச் க்ளாசன் 30, வெயின் பர்னெல் 16, கேசவ் மகாராஜ் 5 என மலமலவென தென்னாப்பிரிக்காவின் விக்கெட்கள் சரிந்தன. கடைசி நேரத்தில் மில்லர் அதிரடியாக 34 பந்துகளில் 35 ரன்களை விளாச 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்தது.

இந்திய இன்னிங்ஸ்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் இந்த முறையும் சொதப்பியது. கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களுக்கும், சுப்மன் கில் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இஷான் கிஷான் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நம்பிக்கை கொடுத்தனர். 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அபார வெற்றி
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 84 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களை குவித்தார். எனினும் அவரால் சதமடிக்க முடியவில்லை. மறுமுணையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 110 பந்துகளில் 109 ரன்களை அடித்து அசத்தினார். இவருக்கு உறுதுணையாக இருந்த சஞ்சு சாம்சன் 30 ரன்களை அடித்தார். இதனால் 45.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்களை அடித்து வெற்றி கண்டது.

3வது ஒருநாள் போட்டி
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டியில் தற்போது இந்திய அணி தரமான பதிலடி கொடுத்து சமன் செய்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications