கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 லீக் சுற்றில் இந்திய அணி 5 மாற்றங்களை செய்திருக்கிறது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே சென்றுள்ளதால் இது சம்பிரதாய ஆட்டமாக தான் கருதப்படுகிறது.
இதனால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கூட்டாக இணைந்து எடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டு இருப்பது அணியில் நடக்க போகும் மாற்றத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் இருந்தார்.
எனினும் அவருக்கு காயம் ஏற்பட்டதால் பல போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு அவருடைய அனுபவம் தேவை என ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்ற நிலையில் மீண்டும் அவருக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை நம்பி உலகக் கோப்பை தொடருக்கு செல்ல வேண்டாம் என டிராவிட் முடிவெடுத்து இருக்கிறார். மேலும் மற்ற அணிகளில் எல்லாம் சுழற்பந்து வீச்சை வீசக்கூடிய பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் லிவிங்ஸ்டோன், இலங்கையில் அசலங்கா போன்ற வீரர்கள் எல்லாம் அவ்வப்போது பந்துவீச்சுக்கு கை கொடுக்கிறார்கள்.
ஏன் ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் கூட கடந்த போட்டியில் 10 ஓவர் வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு பேட்ஸ்மேன் இல்லை. எனினும் திலக் வர்மாவுக்கு சுழற் பந்து ஓரளவுக்கு வீச தெரியும். அவரால் குறைந்தபட்சம் மூன்று ஓவராவது வீச முடியும். இதன் காரணமாக திலக் வர்மாவை உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் செல்வதற்காக ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் வங்கதேசத்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் திலக் வர்மாக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிராக கடைசியாக விளையாட டி20 தொடரில் கூட திலக் வர்மா பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.