பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பயிற்சி போட்டியின் போது 38 ஓவர்கள் பேட்டிங் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யபட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளதால், ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டிகளாக நடக்கவுள்ளது. இதற்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை மறுநாள் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த அணித் தேர்வில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. குறிப்பாக காயமடைந்த வீரர்களின் நிலையை பொறுத்தே அணித் தேர்வு இருக்கப் போகிறது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸையும் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு ஃபிட்னஸ் தேர்வு நாளை தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடக்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல் பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பயிற்சியையும் தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் ஆசியக் கோப்பையில் கேஎல் ராகுல் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைமை குறித்து ரோகித் சர்மாவே சந்தேகம் எழுப்பி வந்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் பயிற்சி போட்டியில் விளையாடி இருக்கிறார். இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் 50 ஓவர்களும் ஃபீல்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர், சுமார் 38 ஓவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பேட்டிங் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை மறுநாள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், காயமடைந்த முக்கிய வீரர்கள் இருவரும் சரியான நேரத்தில் முழு உடல் தகுதியையும் எட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவசர கதியில் வீரர்களை தயார் செய்து ஆசியக் கோப்பைக்கு அழைத்து சென்றால், இந்திய அணிக்கே பின்னடைவாக மாறும் வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் பேக் அப் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.