பயிற்சி போட்டியில் 199 ரன்கள் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர்.. இந்தியாவின் நடுவரிசை சிக்கல் தீர்ந்தது
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடிய போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடரிலிருந்தும் கூட விலகினார். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியை பெற்று விட்டதாக அறிக்கை கிடைத்தவுடன் அவரை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு குழுவினர் சேர்த்தனர்.
இந்த நிலையில் உடல் தகுதியை நிரூபித்தால் போதுமா? அவருடைய பார்ம் என்னானது? மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார் என்று பல முன்னாள் வீரர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்ற பயிற்சி ஆட்டம் ஒன்று நடந்திருக்கிறது. அதில் நடுவரசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 199 ரன்களை குவித்திருக்கிறார்.
இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டம் இழந்து விட்டார். மேலும் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ஓவர் முழுமையாக பில்டிங்கும் செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக தான் ஸ்ரேயாஸ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.இதன் காரணமாக இந்திய அணியில் நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் இந்தியாவின் பேட்டிங் பலம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications