பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டி அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 83 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 89 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.
துலீப் டிராபி தொடரின் 3வது சுற்றுப் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா பி அணியை எதிர்த்து இந்தியா டி அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இந்தியா பி அணி கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்தியா டி அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் - ஸ்ரீகர் பரத் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக ஆடிய படிக்கல் 95 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் 105 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஸ்ரீகர் பரத் ஆட்டமிழந்தார். பின்னர் கடந்த சுற்றில் சிறப்பாக ஆடிய அபார சதம் விளாசி ரிக்கி பூய் ஒருமுனையில் சிறப்பாக விளையாட, மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
இந்த துலீப் டிராபி தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 9, 54, 0 மற்றும் 41 ஆகிய ரன்களை மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்திருந்தார். தற்போது டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தார். சிறப்பாக ஆடிய ரிக்கி பூய் 56 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பை சஞ்சு சாம்சன் எடுத்து கொண்டார்.
மோசமான பந்துகளில் பவுண்டரி, சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன், நல்ல பந்துகளுக்கு மரியாதை அளித்து விளையாடினார். இதன் மூலமாக 48 பந்துகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் சஞ்சு சாம்சன் 83 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 89 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.
இதன் காரணமாக இந்தியா டி அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடிக்கும் பட்சத்தில், தனது பேட்டிங் ஃபார்மை இந்திய அணி நிர்வாகத்திற்கு நிரூபிக்க முடியும். ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் மோசமாக இருந்தது. 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகியதால், விமர்சனங்களும் அதிகரித்தன.
தற்போது துலீப் டிராபியிலேயே சஞ்சு சாம்சன் சதமடித்தால், வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். ஒருவேளை சதம் மிஸ்ஸாகும் பட்சத்தில், சஞ்சு சாம்சனின் இடத்திற்கு இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் கடந்த போட்டியிலேயே சதம் விளாசி இஷான் கிஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.