இனி அந்த பிரச்சினையே இல்ல.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு பச்சைக்கொடி.. வங்கதேச டெஸ்ட் தொடரில் ரன்வேட்டை ரெடி!
சட்டாகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள சூழலில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இருந்த பெரிய பிரச்சினைக்கு ராகுல் டிராவிட் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுக்க ஆவலுடன் காத்துள்ளது.
இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதியன்று சட்டாகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேச டெஸ்ட் தொடர்
சமீபத்தில் நடந்த 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய மிடில் ஆர்டரில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் ஸ்ரேயாஸ் ஐயர். சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்த அவரின் ஷாட் தேர்வுகள் தற்போது முன்னேறியுள்ளன. ஆனால் ஷார்ட் பந்து பிரச்சினை மட்டும் அவரிடம் இருந்து நீங்காமலேயே இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஷார்ட் பாலை எதிர்கொள்ள முடியாமல் தான் அவுட்டாகிறார். முதல் ஒருநாள் போட்டியில் ஷார்ட் பாலில் தான் அவுட்டானார்.

அவருக்கு என்ன பிரச்சினை
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, ஃபீல்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அப்போது அவரின் இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது இருந்து உயரமாக வரும் பந்துகளை புல் ஷாட்டாக திருப்பிவிடுவதில் அவருக்கு பிரச்சினை இருந்துக்கொண்டே தான் இருந்தது.

பச்சைக்கொடி
இந்நிலையில் இதற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருடன் ராகுல் டிராவிட் நீண்ட நேரம் செலவிட்டு, ஷார்ட் பால்களை எதிர்கொள்ள பயிற்சி கொடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் அவருக்கு தொடர்ச்சியாக அந்த பந்துகளையே வீசி அவரை பேட்டிங் ஆட வைத்துள்ளனர். பயிற்சியின் முடிவில் அவருக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்ரேயாஸின் இடம்
இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவின் இடம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. சரியான ஃபார்மில் இல்லாமல் தவிக்கும் அவருக்கு, வங்கதேச தொடர் தான் கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் சொதப்பிவிட்டால், ஸ்ரேயாஸ் ஐயர் தான் அவரின் இடத்தை நிரப்பவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications