பாலக்கலே: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஷார்ட் பாலில் ஆட்டமிழந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த அணியில் காயம் காரணமாக 6 மாதங்களாக ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.

இந்த நிலையில் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தனர். இதனால் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இன்னொரு பக்கம் சுப்மன் கில் 18 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே எடுத்து களத்தில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
நீண்ட நாட்களுக்கு பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வந்த பின், உடனடியாக ஹாரிஸ் ராஃப் அட்டாக்கில் வந்தார். அவரை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 2 பவுண்டரி உட்பட 12 ரன்களை குவித்து அசத்தினார். இதையடுத்து நசீம் ஷா வீசிய 9வது ஓவர் மெய்டனாகியது. பின்னர் 10வது மீண்டும் ஹாரிஸ் ராஃப் வீசினார். இந்த ஓவரின் ஒவ்வொரு பந்தும் 140 கிமீ வேகத்திற்கு மேல் சென்றது.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு திட்டத்துடனும் ஹாரிஸ் ராஃப் வந்திருந்தார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஹாரிஸ் ராஃப் ஷார்ட் பால் வீச, அதனை ஸ்ரேயாஸ் ஐயர் புல் ஷாட் அடிக்கிறேன் என்ற பெயரில் ஃபக்கர் ஜமானிடம் கேட்ச்சானார். இதனால் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடக்கம் முதலே ஷார்ட் பால் பிரச்சனை இருந்தது.
இது ஐபிஎல், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களின் போது கண்கூடாக தெரியும். இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த 3 மாதங்களாக என்சிவியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இப்போதும் ஷார்ட் பாலில் ஆட்டமிழந்திருப்பது தான் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ரோகித் சர்மா ஷார்ட் பாலில் அடிப்பதற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பாலை எதிர்கொண்டு வருவதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. ரோகித் சர்மாவே அனைத்து ஷார்ட் பால்களையும் விளாசாமல் தேவையான பந்தை மட்டுமே புல் அடித்து சிக்சருக்கு விளாசுவார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், ஷார்ட் பால் வீசினாலே புல் ஷாட்டிற்கு சென்று விக்கெட் விடுவது, அவரின் பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. உலகக்கோப்பை நெருங்கும் சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பால் பிரச்சன்மையுடன் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.