
முதல் போட்டி
ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டதால், டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் வீரர் என்றாலும், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுக்கொடுத்து அசத்தினார். இவரின் கேப்டன்சியை பார்த்த கிரிக்கெட் வல்லுநர்கள், இந்திய அணியை வழிநடத்தவே தகுதியுள்ளது எனக்கூறினர்.

ரிஷப் பண்ட்-க்கு சிக்கல்
ஆனால் தற்போது அவரின் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை தொடருக்கான கேப்டனாகவே ஸ்ரேயாஸ் ஐயர் தான் நியமிக்கப்படவிருந்தது. ஆனால் அவர் முழு உடற்தகுதி பெறாததால் அந்த வாய்ப்பு தள்ளிப்போனது.

மீண்டும் அணியில்
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பூரண குணமடைந்து முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேசிய அகாடமியில் இருந்து சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2 வது பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கேப்டன் பதவி அவரிடமே கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

போட்டி விவரங்கள்
ஐபிஎல் தொடரின் 2வது பாதி செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. டெல்லி அணி வரும் செப்டம்பர் 22ம் தேதி தனது முதல் ஆட்டமாக ஐதராபாத் அணியுடன் மோதவிருக்கிறது.


Click it and Unblock the Notifications