சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நினைத்ததை விட அவருடைய காயம் மிகவும் அபாயகரமாக இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
விலா எலும்பில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் உடனடியாக ஐசுயூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை அடுத்து பிசிசிஐ யின் மருத்துவ குழு உடனடியாக ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது ஸ்ரேயாஸ் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் ஐசுயூவில் இருந்து வெளியே வந்து விட்டதாகவும் பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரேயாஸ் குடும்பத்தினர் ஆஸ்திரேலியா செல்ல விசா நடைமுறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சிட்னியில் உள்ள அவருடைய நண்பர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் பயப்படும் படி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை ஸ்ரேயாஸ் மருத்துவமனையில் இருந்து எப்போது வெளியே வருவார்? எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்திய அணியின் துணை கேப்டனாக விளங்கும் ஸ்ரேயாஸ் ஒரு மாத காலத்திற்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் மூன்று ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் இடம் பெறுவது சந்தேகம் என தெரிகிறது. இந்திய அணி t20 தொடரில் பங்கேற்பதற்காக கென்பேரா சென்ற நிலையில் பிசிசிஐ மருத்துவ குழுவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய மருத்துவர்கள் சிட்னியிலே தங்கி ஸ்ரேயாஸ் ஐயரை கண்காணித்து வருவதாக தெரிகிறது.