மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் இரண்டு குழந்தைகளுக்கு தான் தாயாகிவிட்டதாக நம்புவதாகவும், மனதிலேயே அவரை திருமணம் செய்துவிட்டதாகவும் பிரபல ஹிந்தி பிக் பாஸ் பிரபலம் எடின் ரோஸ் கூறியிருக்கிறார். இது பாலிவுட் வட்டாரத்திலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தான் எதற்காக ஸ்ரேயாஸ் ஐயரை விரும்புகிறேன், அவரிடம் அப்படி என்ன உள்ளது என விவரித்திருக்கும் அவர், ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை ஒரு தமிழர் என்பதையும் ஒரு காரணமாகக் கூறியிருக்கிறார். எடின் ரோஸ் அப்படி என்ன சொல்லி இருக்கிறார் என்று முழுமையாகப் பார்க்கலாம்.

ஊடகம் ஒன்றுக்கு எடின் ரோஸ் அளித்த பேட்டியில், "நான் ஸ்ரேயாஸ் ஐயரின் குழந்தைகளுக்கு தாயாகி விட்டதாக நம்புகிறேன். என் மனதில் நான் ஏற்கனவே அவரை திருமணம் செய்து விட்டேன். நீங்கள் எப்போதும் நேர்மறையான எண்ணத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் மாயையாக அதை நம்ப வேண்டும். எங்கோ நமது முயற்சி பிரபஞ்சத்திற்கு கேட்கும்."
"எனக்கு நான்கு விஷயங்கள் தேவை: உயரமாக இருக்க வேண்டும், கருப்பாக இருக்க வேண்டும், தாடி வைத்திருக்க வேண்டும், வாட்டசாட்டமாக இருக்க வேண்டும்," என்று ஸ்ரேயாஸ் ஐயரைப் பற்றி விவரித்தார் எடின் ரோஸ்.
மேலும் கூறுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் நாட்டுக்காக விளையாடுகிறார். அதைவிட அவரை விரும்புவதற்கு வேறு என்ன வேண்டும்? மேலும் அவர் தென்னிந்தியர். என்னுடைய தந்தையைப் போலவே அவருடைய தந்தையும் ஒரு தமிழர்," என்றார் எடின் ரோஸ்.
எடின் ரோஸின் இந்த ஆசை நிறைவேறுமா என பார்க்கலாம். ஸ்ரேயாஸ் ஐயர் இப்போதுதான் கிரிக்கெட் உலகில் பெரிய சவால்களில் இருந்து மீண்டு புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடினார்.
600 ரன்கள் சேர்த்து அவர், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் வரலாற்றிலேயே டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.