மும்பை: இந்த ஆண்டின் துவக்கத்தில் பிசிசிஐ கோபத்துக்கு ஆளான ஸ்ரேயாஸ் ஐயர் அதன்பின் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பிசிசிஐ-க்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறார். அதனால், விரைவில் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடவில்லை என்பதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவரை உள்ளூர் ரஞ்சி ட்ராபி டெஸ்ட் போட்டியில் ஆடுமாறு இந்திய அணி நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது.

ஆனால், முதுகில் வலி இருந்ததால் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், அவர் அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்கவில்லை என அவர் மீது கோபமடைந்த பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதன் பின் ஐபிஎல் தொடரில் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை பெற்றுக் கொடுத்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
அதன் பின் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயர் 452 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் சராசரி 90.4 என்பதாக இருந்தது. ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடர் வடிவில் இருக்கும் நிலையில் அதில் அவர் 88.9 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அடுத்து நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணிக்காக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி 345 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 49.3 என்பதாக இருந்தது. 188.5 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன் குவித்து மிரட்டி இருந்தார்.
அடுத்து உள்ளூர் ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பங்கேற்று இருக்கிறார். இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் 158 ரன்கள் சேர்த்திருக்கிறார். முதல் போட்டியில் 112 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது போட்டியில் 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் நாட் அவுட் ஆக இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 210.6 என்பதாக உள்ளது. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ரன் குவித்து இருக்கிறார். இதை அடுத்து விரைவில் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு பிசிசிஐ தேர்வு குழு தள்ளப்பட்டு இருக்கிறது.