மும்பை: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், நீண்டகால காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, பிசிசிஐயின் உடல் தகுதி சான்றிதழைப் பெற்றுள்ளார். இதனால், எதிர்வரும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் அவர் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோரும் இத்தொடரில் அணிக்குத் திரும்புகின்றனர்.
கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட மண்ணீரல் காயம், அவரை இரண்டு மாதங்களுக்கும் மேலாக களத்திலிருந்து விலக்கியது. தொடர்ச்சியான சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ஐயர், பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாதமியில் (NCA) மறுசீரமைப்புப் பயிற்சிகளை மேற்கொண்டார். விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணிக்காகக் களமிறங்கி, ஜெய்ப்பூரில் ஹிமாச்சல் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து, தனது உடல் தகுதியை நிரூபித்தார்.
ஏற்கனவே நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஐயருக்கு, தற்போது NCA முழு ஒப்புதல் அளித்துள்ளது. அணியின் துணை கேப்டனான அவர், ஜனவரி 11 அன்று வதோதராவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் நடுவரிசையில் விளையாடிய ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது தற்போது நடக்காது என தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், கேட்ச் பிடிக்க முயன்றபோது ஐயருக்கு காயம் ஏற்பட்டது. களத்தில் வலியால் துடித்த அவர், உடைமாற்றும் அறையில் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உள் இரத்தப்போக்கை நிறுத்த சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காயம் காரணமாக சிட்னியில் சிறிதுகாலம் தங்கியிருந்த ஐயர், பின்னர் சொந்த ஊர் திரும்பினார். நியூசிலாந்து ஒருநாள் தொடரில், கழுத்துக் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரைத் தவறவிட்ட கேப்டன் ஷுப்மன் கில்லும் திரும்புவது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜும் அணியில் இடம்பிடித்துள்ளார்.