மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் களமிறங்க உள்ளார். கடந்த 2023 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும், 2024 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கடைசியாக விளையாடிய அவர், தற்போது மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை 2025 மற்றும் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 26.75 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், அந்த தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவர், அந்த தொடரில் 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மீண்டும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அனைத்து விதமான போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயரின் அனுபவமும், திறமையும் அணிக்குத் தேவை. குறிப்பாக, சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் அவரது திறன், இந்திய மண்ணில் நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அணிக்கு பெரும் பலமாக இருக்கும்" என தேர்வுக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 2-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் 14 வரை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெற உள்ளது.
நீண்ட நாட்களாக தனது உடற்தகுதி மற்றும் ஃபார்ம் காரணமாக டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடிக்க முடியாமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது தனது சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் அணிக்குத் திரும்பவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.