வைபவ் சூர்யவன்ஷி இன்று பட்டையை கிளப்புவார்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக, இளம் பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் கடினமான தொடக்கத்திலிருந்து தவறுகளைத் திருத்திக் கொண்டு, வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த முழுத் தகுதியுடன் வைபவ் தயாராக உள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹராரேவில் நடைபெறவுள்ள தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாகப் பேசிய ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான சவாலான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, 15 வயதான சூர்யவன்ஷி மீண்டு வருவார் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து இளம் வீரர்களும் நிச்சயமாக தீவிரமாகப் பயிற்சி செய்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். டி20 தொடருக்குப் பிறகு அவர்களுக்குப் போதிய இடைவெளி கிடைத்தது. எனவே, தான் எங்கு தவறு செய்தார் என்பதை சூர்யவன்ஷி நிச்சயம் கண்டறிந்து சரிசெய்திருப்பார். அதனால், தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு அதிக அறிவுரைகளை வழங்க வேண்டியதில்லை" என்று கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அடைந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு வருவதை இலக்காகக் கொண்டு இந்திய அணி இந்த ஜிம்பாப்வே தொடரை எதிர்கொள்கிறது. தோல்வி பயம் அல்லது வெளிப்புற விமர்சனங்கள் பற்றி கவலைப்படாமல், சுதந்திரமாகப் பயமின்றி விளையாடுமாறு தனது இளம் அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் வலியுறுத்தியுள்ளார்.
"கடந்த நான்கு மாதங்களில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன என்பது உண்மைதான். இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி, இது தொடர்ந்து நடக்கவே செய்யும். ஆனால் நான் எனது பயிற்சி முறைகளை சரியாகப் பின்பற்றி, அணிக்காக எனது 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்,
இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் வைபவ் நீக்கப்பட்டது அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்களை எழுப்பியது. வெறும் மூன்று இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவரை நீக்கிய முடிவை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்பினர். எனினும், தமக்கு தேவையான வழிகாட்டுதல் கிடைத்ததாக வைபவ் கூறினார்.
"எனக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பயிற்சியாளர்கள் உடனடியாக வழங்குகிறார்கள். என் பயிற்சிக்குத் தேவையான அனைத்தும் எனக்குக் கிடைக்கின்றன. அஇப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன், எனக்குள் நல்ல தன்னம்பிக்கையும் உள்ளது" என்று வைபவ் கூறினார். தற்போது முதல் டி20 போட்டி நடைபெறும் ஹராரேவில் தான் அண்டர் 19 உலககோப்பை பைனலில் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார்.


Click it and Unblock the Notifications

