ஜெய்ப்பூர்: ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்யாத மாபெரும் சாதனையைச் செய்திருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். மூன்று வெவ்வேறு அணிகளுக்குக் கேப்டனாக இருந்த அவர், அந்த மூன்று அணிகளையும் பிளே ஆஃப்க்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த இரண்டு வெற்றிகளால் நேற்று ஒரே நாளில் 3 அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப்க்கு முன்னேறின.

பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது அணியாகக் கேப்டனாகப் பஞ்சாப் கிங்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த அணியை பிளே ஆஃப்க்கு அழைத்துச் சென்றார். அடுத்து 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதோடு கோப்பையும் வென்று கொடுத்தார்.
அதன் பிறகு 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், அந்த அணியையும் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன் மற்றொரு கேப்டன் மட்டுமே இரண்டு வெவ்வேறு அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அவர் ஸ்டீவ் ஸ்மித். 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியையும் ஸ்டீவ் ஸ்மித் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். வேறு எந்த ஒரு வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில்லை.
அதிலும் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக முழு சீசனும் செயல்படவில்லை. அந்த அணியின் கேப்டனாக ஷேன் வாட்சன் இருந்தார். அவர் பாதியில் காயம் காரணமாக விலகியதை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனவே, அந்த பிளே ஆஃப் சுற்று முன்னேற்றம் என்பது ஷேன் வாட்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து செய்ததாகவே கருத முடியும்.
இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றால், அவர் மூன்றாவதாக இரண்டு வெவ்வேறு அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையைச் செய்வார். இதற்கு முன் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை 2022 மற்றும் 2023 என இரண்டு ஆண்டுகளில் பிளே ஆஃப்க்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
இந்த சாதனையை அடுத்து இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியைக் கோப்பை வெல்ல வைப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.